புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, March 30, 2009

வடிகால்

ஏதேதோ கோபங்களோடு
வீடடைகிறேன்

ஓர் அறை
கொடுத்தால்
கோபம் தணியலாம்...

நீ
வீட்டிலில்லை

காத்திருத்தலில்
நேரத்தோடு
சேர்ந்து கரைகின்றன
முந்தைய கோபங்களும்

அறைவாங்க
நீயில்லையென்ற
கோபம் மட்டும்
இப்போது
காத்திருக்கிறது
உன்னை அறைய

Thursday, March 26, 2009

ஓடி விளையாடு பாப்பா

ஆயுதம் தெரிவு செய்

இலக்கினைத் தீர்மானி

குறி மேல் கவனம் குவி

தளம் தகர்

குடல் சரித்துக்
குருதி பெருக்கு

எங்கும் சிவப்பு
நிறைந்து பெருகட்டும்

உயிர் பிரியும்
உன்னதம் ரசி

பிணக்குவியலில்
அரியணையேறு

மண்டையோடுகளில்
மகுடம் சூடு

பயிற்சிகள் வீணாவதில்லை!
உடனிருப்பவனின்
உயிர் பறிக்கவேனும்
உபாயம் சொல்லித்தரும்

நாளை,
போருக்காக நீயோ,
உனக்காக ஒரு போரோ
காத்திருத்தல் நிச்சயம்

அதுவரை.....
ஆயத்தம் செய்துகொள்.....
வீடியோ கேம்களில்

Sunday, March 22, 2009

உக்கிரம்

உரசியதும் பற்றிக்கொள்ளும்
தீப்பெட்டிக்குள் தீக்குச்சிகள்
கோடையில் பேருந்துப் பயணம்

சோப்பு, சீப்பு, கண்ணாடி


முகத்திலறைந்து
மூடப்படுகிறது
இன்னுமொரு கதவு....

பழைய புன்னகையோடு
தட்டப்படுகிறது
இன்னுமொரு கதவு!

Friday, March 20, 2009

எதிர் நிகழ்வு

இடித்துச் சென்ற ஆட்டோவின்
பின்புறக் கண்ணாடியை
உடைத்த
வயதான பைத்தியக்காரியின்
மனதில் இன்னுமிருக்கலாம்,
ஓடிப்போன கணவனோ,
துரத்திவிட்ட உறவோ,
அவள் மனம் பிறழ்ந்த
அந்தக் கணமோ.....

இறங்கி வந்த ஆட்டோக்காரன்
விட்ட அறையில்
இருக்கலாம்,
திரும்பிப் படுத்துக்கொண்ட மனைவி,
கடன் கொடுத்தவனின் வார்த்தை,
பணம் பிடுங்கிய யாரோ போலீஸ்காரன்
மீதான கோபம்....

விலக்கிவிட்டு,
அவளை அக்கறையோடு
அனுப்பி வைத்த
போலீஸ்காரன் வீட்டில் இருக்கலாம்,
அவன்
நெற்றியிலோ,
உதட்டிலோ,
கன்னத்திலோ,
முத்தமிட
அன்பான ஒரு பெண்.

Tuesday, March 03, 2009

மிருகம் நீயென்றுணர்

(உயிர்மை.காமின் 'உயிரோசை' இதழில் இக்கவிதை வெளியானது. )

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)


ஊருக்குள் மிருகங்கள்
உலவுவதாய்ச் சொன்னார்கள்

இருள் கவிந்ததும்
வெளிவருவதாயும்
ஒளி வந்ததும்
மறைந்து போவதாயும் பேச்சு

பகலும் இரவுமற்ற
பொழுதுகளில் பார்த்தொமேன்றனர்
நரிகளை ஆடுகளெனச்
சத்தியம் செய்தவர்கள்

ரத்தமும் சதையுமாய்
உண்டு செரித்து, மிருகங்கள்
எச்சமாய் விட்டுச்செல்கின்றன
மிச்ச மீதி உயிரையோ,
அழிக்கப்படாத கொஞ்சம் கற்பையோ,
கிழிக்கப்பட்ட இதயத்தின் கடைசி ஒலியையோ,
ஒன்பதரை மாதங்கள்
ஒன்று சேர்ந்து
ஒரு நொடிக்குள்
உருக்குலைக்கப்பட்ட சிதைவையோ!

மிருகங்களின் வாயொழுகும்
குருதியில் தோய்ந்தபடி,
குற்ற உணர்வோடு
வீடு சேர்கின்றன
செய்தித்தாள்கள்

வளர்ந்த வண்ணமேயிருக்கின்றன
மிருகங்கள் குறித்தான
பேச்சும், பயமும்

தீராதிருப்பது,
மிருகத்தின் உருவம் பற்றிய
சர்ச்சையும்,
மிருகத்தின் மீதான ரகசிய
மோகமும்தான்

புகையுருவமாய்ப்
புலப்படாமல்
எழுந்தலைகின்றன உருவங்கள்!

பிறப்புறுப்பைத் தீண்டிச்சென்ற
பககத்துவீட்டுக்காரனைப்
போலிருந்ததாய்ச் சொன்னாள்
புன்னகைக்க மட்டுமே
அறிந்திருந்த ஒரு சிறுமி

சிகரெட் புகையடைந்த
விடுதியறையொன்றில்
வன்புணர்ந்தவனின்
கண்களைக் கொண்டிருந்ததென்றாள்
வீதியோரத்தில் கிடக்குமொருத்தி

உயிர் பிழிந்து ரசித்த
உருவங்களினூடே
ஒளிந்துகொண்ட
காதலனைப்போல்
கோரமாக இருந்ததென்றாள்
இமைப்பதை மறந்துபோன
இமைகளைக் கொண்டவள்

ஆண்மையைத் தன்னிடம் மட்டும்
நிரூபிக்கும்
கணவனின் உயரமிருக்குமென்றாள்
தேனிலவில் உடல் தொலைத்த
மனைவிகளில் ஒருத்தி

தெருமுனையைக் கடக்கையில்
துகிலுரியும் பார்வையை வீசிச்செல்லும்
எவனோ ஒருவனை
ஒத்திருந்ததென்றாள்
எப்போதும் உடை சரி செய்யும்
எவளோ ஒருத்தி

மிருகத்தின் உருவம்
இன்னதென்று தெளியவில்லை.
தன்னைப்போலில்லை
என்பதே
சந்தோஷம் எல்லோருக்கும்

ஆனால்,
யாருமற்ற இரவுகளில்,
எல்லோரும் சரி பார்க்கிறார்கள்
கண்ணாடி காட்டும் பிம்பத்தில்
கொஞ்சமேனும்
மிருகத்தின் சாயலை.