புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 31, 2009

மண்ணியல்

விளைநிலத்தின் மீதேறி
வளர்ந்து செல்கிறது
மேலே மேலே உயரும்
கட்டிடத்தின்
நிழல்

படிந்த வரிகள் - 8

நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-கவிஞர் மகுடேசுவரன்
(காமக்கடும்புனல்)

Tuesday, July 28, 2009

நனைப்பதை நனைப்பவன்

யார்யாரையோ மெழுகிய காற்று
என்னையும் மெழுகிப் போகிறது

யார்யாரையோ நனைத்த அலை
என்னையும் நனைத்துப் போகிறது

யார்யார் மீதோ படிந்த உப்பு
என் மீதும் கரிக்கிறது

யார் யார் கண்களிலோ விழுந்து
நினைவுக்குள் சிக்குண்ட துளி
எனக்குள்ளும் விழுந்து
தொலைந்து போகிறது

இந்த வரிகளைப்
பாடிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால் சொல்லுங்கள்
அந்த யாரோவில்
நானும் ஒருவன் என்று

-கடலை நனைப்பவன்

Monday, July 27, 2009

கதவுகளுக்கு வெளியே

கதவுகளுக்கு முன்னால்
தயக்கத்துடன் நிற்கிறேன்
எப்போதும்

நிராகரிப்பின் மீதான பயம்
இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது
தட்டப்போகும் கைகளை

வழிநெடுகக் கதவுகளைச்
செய்துவைத்து
கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
நீங்கள்

திறப்பதைவிட
உடைப்பதே சிறந்தது
என்றெனக்குப் புரியும்
ஒரு நன்னாளில்
உங்கள் ஆதிக்கமுகங்கள்
நொறுங்கிச் சிதைவது பார்த்து
தற்கொலை செய்துகொள்ளவும்
கூடும் நீங்கள்

அத்தைரியத்தின் வேர்கள்
என்னுள் கிளைத்துப் பரவும் வரை
பட்ட மரமென நின்றிருப்பேன்
உங்கள் கதவுகளின் முன்

பின்குறிப்பு : இதுவும் இப்பொழுது எழுதியதன்று. இன்னொரு வகை சுயபுலம்பல் இது. சிலருக்குப் பிடிக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை

Tuesday, July 21, 2009

நிராகரித்தவன்

உங்கள் அழைப்புகளை
மறுதலிக்கிறேன்

உங்கள் போலியான
புன்னகைகளுக்குக்
கருப்பு வர்ணம் பூசுகிறேன்

மிட்டாய் தின்ற சிறுவனின்
வாய் போல் பிசுபிசுக்கும்
உங்கள் நினைவுகளை
அழுத்தி அழிக்கிறேன்

எதிர்பாராமல்
எதிர்ப்பட்டுவிடுவீர்களோ
என்ற அச்சத்தில்
உங்கள் வீதிகளைக்
கவனமாகத் தவிர்க்கிறேன்

நட்பு வேண்டியதாய்க்
காட்டிக்கொள்ளும்
உங்கள் கடைசி
உபாயங்களை
உடைத்தெறிகிறேன்

சிதிலமாகிப்போன
நம் நட்பு கணங்களின் மேல்
உங்கள் கல்லறைகளை
எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

நம்மில் இருந்த
உங்களை மட்டும்
பூரணமாய்ப் பிய்த்தெறிகிறேன்

என் நிராகரிப்பின்
எந்தவொரு வலியுமற்று
எங்கேயோ சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறீர்கள் நீங்கள்

நிராகரித்துவிட்ட
வலி பொறுக்காமல்
உங்களுக்காகவும் சேர்ந்து
இப்படித்தான் அழுதுகொண்டிருக்கிறோம்
நானும் என் பேனாவும்


பின்குறிப்பு : இது இப்பொழுது எழுதியதன்று; விரக்தியின் அலைகள் அடிக்கும் கரையில் உப்புக்காற்றில் எழுதி வைத்தது. இன்னும் பிசுபிசுப்பு மீதமிருக்கிறது.

Monday, July 20, 2009

நன்றியும், விருப்பமும்


நேசமித்ரன் அவர்களின் அன்புக்கு நன்றி! அன்புக்கு நன்றி செய்துவிட ஏதேனும் உண்மையில் இருக்கிறதா என்ன?

சுவாரஸ்யம் நிறைந்த வலைப்பூ என்ற விருதினை வழங்கியிருக்கிறார் நண்பர் நேசமித்ரன். மகிழ்ச்சி. என்னோடு இந்த விருதினை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தமிழ்நதி, நந்தா, பிரவின்ஸ்கா, ச.முத்துவேல் மற்றும் கௌரிப்ரியா இவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இப்போது, இந்த விருதினை நான் ரசிக்கும், வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டிய தருணத்தில் நான் இருக்கிறேன். சிலர் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள்; நான் தொடந்து படிக்கும் மீதமிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் எனக்கு நண்பர்களாய் இருக்கிறார்கள். அவர்களும், வேறு யாரேனும் விருது கொடுத்து, அங்கீகாரம் பெறும் தகுதி உடையவர்களே. நான் கொடுப்பதை விட, முகம் தெரியாத யாரோ கொடுப்பதே அவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். எனவே, நான் மிகப் பிரயத்தனப்பட்டு கண்டெடுத்த ஆறு பேர் பெயர்களை மட்டும் தருகிறேன். இவர்கள் என்னைக் கவர்ந்த பல ஆக்கங்களைத் தந்திருப்பவர்கள். இதில் இடம்பெறாத பலரும் கூட எனக்கு விருப்பமானவர்களே! ஆனால், நான் மேற்சொன்ன காரணத்தினாலும், ஆறு பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டினாலும் அவர்கள் பெயர்களைச் சொல்ல முடியவில்லை. மற்றபடி, அனைவரும் விருப்பத்துக்குரியவர்களே!

கார்த்தி - நீ
திக்குமுக்காடச் செய்துவிடும் பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஒத்த வயதுக்காரன் என்ற பெயரில் இவர் எனக்கிட்ட பின்னூட்டம் இவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது. வித்தியாசமான வாசிப்பானுபவத்தைத் தரும் என் விருப்பமான ஒரு படைப்பாளி

வெங்கிராஜா - பாதசாரியின் பால்வீதி
இவரது புகைப்படங்களுக்கு நான் மிகப்பெரிய விசிறி. இவரது எழுத்தும் கொஞ்சம் வித்தியாசமானதே.

மண்குதிரை - மண்குதிரை
என் விருப்பக் கவிஞர். மிக அற்புதமான கவிதைகளை சாதாரணமாக வழங்கும் அசாத்திய திறன் கொண்டவர்.

யாத்ரா - யாத்ரா
வாழ்க்கையின் இருள் பக்கங்களைக் கவிதையாக்கும் என் பிரியத்துக்குரிய நண்பர். வலைப்பூவின் மூலமாக என் நண்பரானவர். இவரது வலைப்பூவைப் படிக்கும் யாரும், அமைதியற்ற ஒரு நிலையை சில நிமிடங்களுக்கேனும் பெறுவது நிச்சயம். அது எனக்குப் பிடித்தே இருக்கிறது.

ராஜா சந்திரசேகர் - ராஜா சந்திரசேகர் கவிதைகள்
வாழ்கையின் அற்புதமான, அழகான விஷயங்களைப் பதிவு செய்யும் ஒரு கருவி இவருக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார்கள்.

காயத்ரி - பாலைத்திணை
இவர் கடைசியாகப் பதிவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகின்றன. ஆனால், அடுத்தப் பதிவை எப்போது இடுவார் என்ற எதிர்பார்ப்போடு எப்போதும் இருக்கிறேன். என்னை இப்படிச் செய்தவை இவரது கவிதைகள்.

இங்கே நான் கொடுத்திருக்கும் பதிவர்கள் பெரும்பாலும் உங்களுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். என் விருப்பத்தெரிவின் மிகச் சிறிய பட்டியல் இது. இது போன்றதொரு விருப்பப்பட்டியலை வெளியிடும் வாய்ப்பை வழங்கிய நண்பர் நேசமித்ரனுக்கு மீண்டும் நன்றிகள்.

Saturday, July 18, 2009

இல்லாத முகவரிகள் - 5

கோவில்பட்டியை மீண்டும் தொடும்போது மழை வலுத்திருந்தது. நனைந்தபடி, பேருந்து நிலையத்தை அடைந்து அடுத்த கட்ட பயணத்தைத் திட்டமிட்டோம். திருநெல்வேலி செல்லும் பேருந்தைப் பிடித்தோம். என்னைச் சிறுவனாக்கிவிட்ட இன்னுமொரு பயணம் அது. சாரல் விழும் சாளரம் வழி ஈரம் படிந்த சாலைகளைப் பார்த்துக்கொண்டே பயணித்தோம். நண்பன் சற்றே கண்ணயர்ந்தான். தனிமையில் பயணம் செய்யும் அனுபவமாக அது அமைந்தது. அசதி கொஞ்சம் உடலைத் தளர்த்த தூங்கிப்போனேன். பயணத்தினூடே நிகழும் இது போன்ற சில நொடித்தூக்கங்கள் அலாதியானவை. ஆண்டாண்டு காலமாகத் தூங்கி எழும் உணர்வைத் தரவல்லவை. வாகனம் எழுப்பும் சீரான சத்தம், சுகமான இசையாய் ஒலிக்கும். இப்படியான ஓர் அற்புதமான தூக்கத்தைக் கலைத்துத் தொலைத்தது நடத்துனரின் குரல்.

நண்பன் அவசரமாக என்னை எழுப்பிக் கீழிறக்கினான். இறங்கிய இடத்தில் இருந்தக் கடைகளைத் தவிர்த்துவிட்டு, பேருந்து கடந்து வந்திருந்த பாதையில் நடந்தோம். பத்து நிமிட நடைக்குப் பிறகு இருநூறு வருடத் தமிழக வரலாற்றில் இருந்து சற்றும் பிரித்தறிய முடியாத பெயர் பெற்றுவிட்ட வீர பாண்டியக்கட்டபொம்மனுக்குச் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை வந்தடைந்தோம். நாங்கள் இறங்கி நடை போட்ட ஊர் கயத்தாறு. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஊர். அந்த மரம் சிலை இருக்கும் இடத்துக்கு அருகிலேயே முன்பிருந்ததாகச் சொன்னார்கள். இந்தச்சிலை, 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' திரைப்படம் வெளியான பிறகு, கட்டபொம்மன் நினைவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் நிறுவப்பட்டது. தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரனாகக் கருதப்படும் ஒரு சிற்றரசனுக்கு தமிழகத்தை ஆண்ட எந்த மக்களரசும் நினைவுச்சின்னம் எழுப்ப முனையவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியே!

சிலையின் அருகில் நின்று சில பழங்கதைகள் பேசி, நிழற்படங்கள் எடுத்து, வேறெதுவும் செய்யத் தெரியாமல் அங்கிருந்து அகன்றோம். கட்டபொம்மன் குறித்த சர்ச்சை கிளப்பும் ஒரு கட்டுரையை ஒரு முறை படிக்க நேர்ந்தது. மிகச் சரியான சான்றுகள் இல்லாததாகவும், சரித்திரப் புருஷன் என்று போற்றப்படும் ஒரு மனிதனுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அக்ககட்டுரை இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட செய்தி நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் என்றெனக்குத் தோன்றியதால் குறிப்பிடுகிறேன். இது என் கருத்தோ, கற்பனையோ இல்லை. எட்டப்பன், வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தது ஒரு பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டிருந்தது அக்கட்டுரை. வீரபாண்டியக் கட்டபொம்மன் எட்டப்பன் குடும்பத்துப் பெண்ணொருத்தியை மானபங்கம் செய்ததற்கான அவனது எதிர்விளைவுதான் இது என்று குறிக்கப்பட்டிருந்தது. இதன் மீதான சரித்திரச்சான்றுகள் எதுவும் என்னிடம் கிடையாது. அக்கட்டுரையின் பிரதியும் என்னிடம் இல்லை. உங்களில் யாரேனும் கூட இக்கட்டுரையைப் படித்திருக்கக்கூடும்.























கட்ட பொம்மன் பற்றிய வேறு சில செய்திகளும் நம்மில் சிலருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். கட்டபொம்மனின் மூதாதையர்கள் அவனுக்கு ஐந்து தலைமுறைக்கு முன் ஆந்திரத்தில் இருந்து, வரி வசூல் செய்வதற்காக நாயக்கர் மார்களால் அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் ஜக்கம்மா என்ற சிறு தெய்வத்தை வணங்கினர். திரைப்படத்தில் வருவது போலில்லாமல், ஜாக்ஸன் துரையிடம் கட்டபொம்மன் தெலுங்கில் கூட பேசியிருக்கலாம்.

எப்படியோ, தன் மண்ணுக்காகப் போராடி உயிர் விட்ட ஒரு மனிதனின் உயிர் இங்கே அடங்கியிருக்கிறது. அந்த வகையில் இது போற்றுதலுக்குரிய இடம்தான். நகரப் பேருந்தில் நெல்லையை நோக்கி அமைந்த அடுத்த பயணம் பேச்சுகளால் நிரம்பியிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டோம். அருகிருந்தவர்கள் தம்மோடு வந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். அதில் எங்கும் நெல்லை மணம் கமழ்ந்திருந்தது.

Tuesday, July 14, 2009

சிரிப்பும் சேர்ந்தது

விழுந்து புரண்டு சிரிக்கிறது

கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது

தூந்திர நிமிஷங்களை
மறந்துவிட்டு
உருகியுருகிச் சிரித்தோடுகிறது

பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்

-கடலோடு சிரிப்பவன்

Friday, July 03, 2009

படிந்த வரிகள் - 7

கடவுள் செய்தும்,
காதல் செய்தும்,
கடவுள்
காதல் செய்தும்,
கடவுள் காதல் செய்தும்,
காதல்
கடவுள் செய்தும்,
காதல்கடவுள் செய்தும்......
இந்த இரட்டைக் குவியங்களைத்
திருப்திப்படுத்தப் போய்
நீள்வட்டப் பாதையில்
தலைகுனிந்தே சுற்றுகிறது பூமி !

-நண்பன் ஞானசேகர் (http://jssekar.blogspot.com/)

படிந்த வரிகள் - 6

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

-கவிஞர் பிரமிள்

Wednesday, July 01, 2009

மறந்த கதைகள்

எனக்குப் பிடித்த
ஒளிரும் கண்கள் கொண்ட
மீன் பற்றிய
கதையொன்று
மறந்து போனதைச்
சொன்னேன் நண்பனிடம்

தன்னிடமும்
அதே போல்
மீன் பற்றிய
மறந்த கதை
உண்டென்றான்

இரண்டு கதைகளும்
ஒன்றே என்று
காரணமின்றி
நம்பத்தொடங்கினோம்
இருவரும்

ஈரம் சேர்ந்தது

தனக்கென்று எதையும்
வைத்துக் கொள்வதில்லை கடல்

நிர்வாணியாகவே அலைகிறது
ஒரு திகம்பரனைப் போல

என்றாலும்
பிரித்துணர முடியாத ஈரம்
அதன் வெளியெங்கும்
பிசுபிசுக்கிறது

- கடலோடு அழுபவன்