புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 26, 2011

டவ்

'டவ் பாரு டவ்'
என்றாள் அம்மா

விரலிடுக்கில்
காற்றைப் பிடித்திழுத்து
புறாவே வந்ததெனச்
சிரித்துச் சொல்கிறது
குழந்தை
'டவ்'

காற்றை லேசாக
அதிர்வூட்டி
நானும் சொல்லிப் பார்த்தேன்
'டவ்'

எனக்குமாகச் சேர்த்தோர்
இறகைப் பரிசளித்துப் போனது
மூவரையும் ரசித்திருந்த
டவ்

பெய்யலானது

உலகின்
மிகச்சிறந்த
முத்தத்தை இடுவதென நாம்
முடிவு செய்திருந்த தினத்தில்
பெய்யலானது மழை

மழையைக் காதலும்
காதலை மழையும்
நனைக்குமழகை
ரசித்திருந்த பொழுதில்
அவசரமாக ஜனித்துத் தொலைத்தது
நம் முத்தம்

இட்டேனா
பெற்றேனா
என்பதறியாது நிகழ்ந்துவிட்ட
முத்தத்தை
உன்னுதடுகள் எப்படி
உணர்ந்திருக்கும்
என்ற ஞானமற்று
உலரத் தொடங்குகின்றன
என்னுதடுகள்,
கோடை மழையின்
ஒரு துளி மட்டும் பருகிய
வண்டலென

சிநேகிதம்

நாள் கடந்து பார்த்த
பழைய சினேகிதியிடம்
வாஞ்சையாய்க்
கை தடவிப் பேசி
மிக இயல்பாகப் பூவைக் கைமாற்றி
தலையில் சூடச் செய்யும்
பூக்காரம்மாளிடம்
எப்படிப் பேரம் பேச முடியும் சொல்

வழியனுப்புதல்

வழியனுப்புதலின்
வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு நிலைகளில்
வாழ்வு

பேருந்து நிலையங்களில்

இரயில் நிலையங்களில்

சிறுபொழுது வசித்த
வாழ்விடங்களின் வாசல்களில்

சிலமுறைகள் விமான நிலையங்களிலும்

நகர்ந்தபின் உணவுண்ணும் நினைப்பில்

கழிவகற்றும் முனைப்பை அடக்கிக்கொண்ட
சிரிப்போடான பேச்சில்

தூக்கம் தொலைந்த துக்கத்தில்

திரும்பிச் செல்லும் பயணம் குறித்த கவலையில்

எந்தச் சிந்தனையுமற்று
முன்னிலை மற்றும் படர்க்கையில் மட்டும்
இதுவரை
இழவு வீடுகளில்

பகற்கலவி

இரவு பணிக்காரனின்
பகற்கலவி
குவிந்திருக்கிறது
எந்நேரமும் தட்டப்படக்கூடும்
வாயிற்கதவின் மீது