புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, July 28, 2011

கவிமூலம்

நினைவடுக்குகளிலிருந்து
காணாமல் போனதொரு கவிதை

எதனிடமிருந்தோ
திருடியதுதான்

அரைத்தூக்கத்தில் வாசித்த
இன்னொருவனின் கவிதை,
மெல்ல மெல்லத் திறக்கும்
கதவின் பேரிரைச்சல் ,
குருட்டுப் பாடகனின்
முதல் நிமிட அபஸ்வரம்,
விபத்தில் நசுங்கியவனின்
கடைசி இழுப்பு

ஏதோ ஒன்றுதான்
மூலமாய் இருந்தது

மீண்டும் கிடைக்கக்கூடும் அதே கவிதை!

வாசிக்காமலா இருக்கப் போகிறேன்
இன்னொருவனின் கவிதையை?
திறக்காமலா இருக்கப்போகிறது
இன்னொரு கதவு?
பாடாமலா இருக்கப் போகிறான்
இன்னொரு குருட்டுப்பாடகன்?
நசுங்காமலா இருக்கப்போகிறான்
இன்னொரு விபத்தில்
இன்னுமொருவன்?